கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பொன்னேரியில் பிரபல முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்குத் தைப்பூசத்தை முன்னிட்டு பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அர்ச்சகர் கோவில் நடையை அடைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் மறு நாள் காலை கோவிலைத் திறக்க வந்த அர்ச்சகருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கோவில் வாசலின் பூட்டானது உடைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்திருந்த சில பக்தர்களும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோவிலின் பீரோவும் உடைக்கப்பட்ட நிலையில் அனைத்து பொருட்களும் சிதறிக் கிடந்தன.
இது குறித்துத் தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது முருகன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை சோதனை செய்தனர். அதில் இரவு நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் எந்திரத்தின் மூலம் தீப்பொறி பரக்கும் அளவிற்குப் பூட்டை அறுத்து கோவிலுக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவையும் திறந்து நகை, பணம் எதுவும் கிடைக்குமா எனத் தேடியுள்ளனர். இருப்பினும் அதில் எதுவும் சிக்கவில்லை இதனால் கோவிலின் கருவறையை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் கருவறையின் பூட்டை உடைக்க முடியாததால் எதுவும் கிடைக்காமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இரண்டு திருடர்களையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
GIPHY App Key not set. Please check settings