சென்னை:
வருகிற 24ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். சிறிது நேரம் உரை நிகழ்த்திய அவர், அரசு தயாரித்து கொடுத்த உரையில் அரசியல் அமைப்புக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் உள்ளதாக கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார். இந்த உரையை சாபநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார்.
இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதற்கிடையே நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 39 இடங்களையும், புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்தையும் என அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இந்தநிலையில், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், வருகிற ஜூன் மாதம் 24ம் தேதி சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், முதல் நாள் கூட்டத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்றும், இதனை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings