சென்னை, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் உட்பட 8 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து டிசம்பர் 25-ம் தேதி மேலும் 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் நாடு முழுவதும் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர் என போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த பயங்கரவாத அமைப்பிற்கு மூளையாகச் செயல்பட்ட அபு சலாம் அலி என்ற நபர் தலைமறைவான நிலையில், அவரை அசாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அந்த நபர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினருடன் இணைந்து அசாம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுங்கியிருந்த அபு சலாம் அலியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings