ஆவடி
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பிருந்தாவன் அவென்யூவில் உள்ள ஜோதி ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் கடந்த 15ம் தேதி அன்று 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். சி.டிஆர். பதிவுகளை வைத்தும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் ராஜஸ்தான் மாநிலம் பிவார் மாவட்டம் பிப்லாட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரின் உத்தரவின் பேரில் திருமுல்லைவாயல் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனி போலீஸ் படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்று பூனம் சந்த்பட் மகன் ஹர்சத் குமார்பட் (வயது 29), சத்தூர் ஹட்ச் சுரேந்தர் சிங் (வயது 35) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நகைக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். தாங்கள் கொள்ளையடித்துச் சென்ற நகைகள் தங்க நகைகள் இல்லை. கவரிங் நகைகள். அவற்றை ரயில்வே மேம்பாலம் அடியில் தண்டவாளத்தின் ஓரத்தில் உள்ள முள் புதரில் கொளுத்தி விட்டதாகவும், இவை அனைத்தும் போலீஸ் புகார் கூறிய நகைக் கடை அதிபர் ரமேஷ் குமார் சொன்னதன் பேரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் விசாரணையில், கைதானவர்கள் தெரிவிக்கையில், நகைக்கடை அதிபர் ரமேஷ் குமார் அதிக கடனில் இருப்பதாகவும், திரும்பவும் கடனை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், ஆகவே இந்த உதவியை செய்தால் அவர் எங்களுக்கு பணம் தருவதாகவும் கூறினார் என்றனர்.
இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களிடமும் நகைக் கடை அதிபரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings