சென்னை:
பள்ளி பொதுத் தேர்வுகள் நாளை திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் நலனுக்கான தேர்வு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிவிப்பில், “நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 21,057 பேரும், பிளஸ் 1 பொதுத்தேர்வை 8 லட்சத்து 23,261 பேரும், பத்தாம் வகுப்புத் தேர்வினை 9 லட்சத்து 13,036 தேர்வர்களும் எழுதவுள்ளனர். பொதுத்தேர்வுகளைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல், பொதுத்தேர்வு எழுதும் 20,476 மாற்றுத் திறனாளிகளுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுதக் கூடுதல் நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்துப் பயன்பெற வசதியாகத் தேர்வுத் துறை இயக்குநரகத்தில் முழு நேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings