சென்னை:
நடிகை விஜயலக்ஷ்மி தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற சீமான் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது புகாரின் சாராம்சம்.
இந்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, ‘ஏற்கனவே 2011ம் ஆண்டு வழங்கிய புகாரைத் திரும்ப பெற்றுக் கொண்டார். பின்னர் 2023ல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். தற்போது தூண்டுதலின் பேரில்தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன் இது இந்தியத் தண்டனை சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ‘எதற்காக வழக்கைத் திரும்பப் பெற்றார்? வழக்கைத் திரும்பப் பெறுவதாகப் புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்தார். ‘சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது’ எனக்கூறிய நீதிபதி, விஜயலட்சுமி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூறி கொடுக்கப்பட்ட சீமான் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
GIPHY App Key not set. Please check settings