in

தேசத்தை திசைதிருப்பும் தியானம்… மோடி தோல்வியடைவார்: சு.வெங்கடேசன் எம்பி அறிக்கை

மதுரை:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்ற அவர், நேற்று மாலை தனது தியானத்தை தொடங்கினார். ஜூன் 1ஆம் தேதி வரை அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு என பிரதமர் மோடிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரிமுனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர் பாறை உள்ள மண்டபத்தை அரசதிகாரத்தைச் சார்ந்த ஒருவர் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனைவருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர.

தமிழகத்திற்கு தியானம் செய்ய வருவதற்கு முன்பு, ஒரிஸாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் புகழ்பெற்ற ஜகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தினார். இப்பொழுது திருடர்களின் நிலத்தில் தியானம் செய்ய வந்துள்ளார்.

தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும். உத்திரபிரதேசத்தில் போய் எங்களை இழித்துப் பேசியதையும், ஒரிஸாவில் போய் பழித்துப் பேசியதையும் ஒவ்வொரு தமிழரும் அறிவோம். எங்கோ நின்று பொல்லாங்கு பேசுதலுக்குத் தமிழ் இலக்கியம் சூட்டியுள்ள பெயர் “புறம் பேசுதல்”.

நீங்கள் அங்கு பேசியதை இங்கு பேசி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள் என்று கூட நாங்கள் கேட்க மாட்டோம். எந்த ஒரு மனிதரிடமும் அவரிடம் இல்லாத ஒன்றை கேட்பது நாகரீகம் அன்று என்பது எங்களுக்குத் தெரியும். திருடர்களின் நிலத்திற்கு வந்துள்ள உங்களுக்கு ஒரிய எழுத்தாளர் சுரேந்திர மஹாந்தி எழுதிய “ நீலமலை” என்கிற நூலைப் பரிசளிக்க விழைகிறோம். விவேகானந்தர் பாறையின் அமைதியான, தனித்த சூழலில் அந்நூலினைப் படிக்க முயலுங்கள்.

ஒரியாவின் ஒவ்வொரு உயிரிலும் ஜகந்நாதரின் ஈடுபாட்டுக்கென ஓர் இடம் உண்டு என்பதை முழுமுற்றாக நம்பும் ஒரியாவின் மைந்தனான சுரேந்திர மஹாந்தியின் எழுத்தை வாசியுங்கள். கங்கை முதல் கோதாவரி வரை பரந்து விரிந்த உத்கல சாம்ராஜ்யத்தின் நிரந்தர அதிபதியாக ஒரிய மக்களால் காலமெல்லாம் போற்றப்படும் ஜகந்நாதரின் பொக்கிஷ அறையின் சாவியை மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கூத்தப்பன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறுவது ஆன்மீகமா? அரசியலா? அல்லது அருவருப்பா?

இதற்கும்மேல் பகவான் ஜகந்நாதர் உங்களின் பக்தர் என்கிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் திருடர்களாக்கப்பட்டார்கள். தெய்வங்கள் உங்களின் பக்தர்களாக்கப்பட்டார்கள். இப்பொழுது விவேகானந்தர் பாறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின் உங்கள் விசுவாசிகள் விவேகானந்தரை என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. பகவானே உங்களின் பக்தராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது?

இந்து பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை எடுத்து இஸ்லாம் பெண்களுக்கு எதிர்கட்சிகள் கொடுத்துவிடுவார்கள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்பவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றெல்லாம் பேசிவிட்டுத்தான் தியான மேடைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கு வந்த உங்களிடம் சுரேந்திர மஹாந்தியின் நூலினை பரிந்துரைப்பதற்கு காரணம் உண்டு.

ஜகந்நாதரின் மரியாதையைக் காக்கும் பொருட்டு சொல்லவொன்னாத் துயரத்தைச் சந்திக்கும் ஹாபிஸ் காதர் என்கிற இஸ்லாமிய அரசனின் போராட்டமே இந்நூல். நீங்கள் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் இந்தியா மீளும் என்பதற்கு எங்களின் வேர்களே சான்று. நீங்கள் விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் ஆற்றல் எம்மண்ணுக்கு உண்டு. எல்லா மார்க்கத்திலும் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறை உண்டு.மனதை ஒருமுகப்படுத்தலே தியானம். ஆனால் எதில் என்ற கேள்வியில்தான் ஆன்மீகமும் அரசியலும் அடங்கியுள்ளது. நீங்கள் செய்துமுடித்து வந்துள்ள தேர்தல் பரப்புரைகளின் வழியே உங்கள் மனமும் சிந்தனையும் என்னவாக உள்ளது என்பதை நாடறிந்துள்ளது.

நீங்கள் பேசிய எல்லாவற்றிலிருந்தும் தேசத்தைத் திசைதிருப்ப தியானம் பயன்படலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அதில் தோல்வியே அடைவீர்கள். தியாகமும் தியானமும் விளம்பரத்தின் பொருட்டு அமையுமேயானால் அச்செயலுக்கு விவேகானந்தர் சூட்டும் பட்டத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. “இதுவரை இருந்த பிரதமர்களிலே அப்பதவிக்கான தகுதியை மிகவும் தாழ்த்தியவர்” நீங்கள் என மன்மோகன்சிங் சொன்னதை மேலும் தாழ்த்த விவேகானந்தரைச் சான்றாக்க விரும்பவில்லை.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குளித்தலை அஞ்சநேயர் கோவில் அருகே கட்டப்படும் கழிவறைக்கு தடை விதிக்க கோரிக்கை

வெயில் தாக்கம் அதிகரிப்பு: பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை நீட்டிப்பு