மதுரை:
மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு மதுரை தோப்பூரில் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கட்டுமான பணி தொடங்கிய உடனேயே கொரோனா பரவல், ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைப்பதில் தாமதம், தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணி முடங்கியது.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் வேளையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாஜக மற்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் இடையே கடும் கருத்து மோதல்கள் வெடித்து வருகின்றன. இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான தொகை என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. 2026க்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‛‛மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன சட்டம் 1956 பபிரிவு 6ல் உள்ள விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர் மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினராகவும் செயல்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ள காமகோடி ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு சென்னை ஐஐடியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். மேலும் காமகோடி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings