சென்னை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து இருந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அன்று முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுமா? என்கிற கேள்வி மேலோங்கியுள்ளது.
இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜாமீன் என்பது நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான சட்டப்படியான உரிமை. ஆனால், இவர்கள் தேவையில்லாமல் ஏறத்தாழ 15 மாத காலம், செந்தில் பாலாஜியை சிறையிலே வைத்திருந்தனர். அந்த வழக்கில் என்ன முகாந்திரம் இருக்கிறது என்று தெரியவில்லை. குற்றச்சாட்டுப் பதிவிலும்கூட சரியான முறையில், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.
அமலாக்கத்துறை திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது, மத்திய அரசு தங்களுக்கு கீழ் உள்ள துறைகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியதுள்ளதை நிரூபித்துள்ளது. பாஜக வாஷிங் மெஷினில் இணைந்தால் அவர்கள் தூய்மையாகிவிடுவார்கள். அப்படி குற்றம்சாட்டப்பட்ட பலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு காலதாமதாக வழங்கிய நீதியாகவே இதை கருதுகிறேன்.
செந்தில் பாலாஜி அமைச்சராக எந்தவித தடையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings