in

முதல்வருக்கு விருப்பமில்லை என்றால் விரைவாக மூடுவிழா நடத்தலாமே

தலையங்கம்

                                                                                                                                                   – சிவா பரமேஸ்வரன்

தமிழக அமைச்சரவை மிக மூத்த அமைச்சர்களில் ஒருவர் முத்துசாமி. 1980ஆம் ஆண்டே தமிழக அரசில் அமைச்சரானவர். நான்கு முதல்வர்களின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்துள்ளவர். அந்த வகையில் அவரது அனுபவத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

தற்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அவர் வசமே உள்ளது. எனவே தமிழ்நாட்டில் மதுவிலக்கு அல்லது மது ஒழிப்பு என்ற பேச்சு வந்தால் ஆட்சி அலுவல் ரீதியாக அது அந்த துறையிலிருந்து தான் தொடங்கும். இன்றைய நிலையில், அது அமைச்சர் முத்துசாமியிடமிருந்து தான் தொடங்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆக்கப்பூர்வமான  ஒரு கருத்தை வைத்து, அது தொடர்பில் மாநாடு ஒன்றையும் கள்ளக்குறிச்சியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

“தமிழக முதல்வருக்கு மதுக்கடைகளை தொடர்ந்து நடத்துவதில் எள்ளளவும் விருப்பமில்லை, டாஸ்மாக் கடைகளை என்றாவது ஒரு நாள் மூட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார்” என்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார், நல்லது அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் முத்துசாமியும் அந்த இலக்கை நோக்கி விரைவாக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவோம். அதே நேரம் உடனடியாக அரசின் மதுபான கடைகளை மூடுவதில் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆயத்தீர்வை அமைச்சர் கூறுவது நியாயமானது. ஆனால், யாரும் ஒரே நாளில் அனைத்தையும் மூடிவிடுங்கள் என்று கூறவில்லையே.

மதுக்கடைகள் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் வருகிறது. அதை மூடினால், அரச வருமானத்தில் பெரிய ஓட்டை விழும், அதற்கு ஈடாக மாற்று வருமானத்தை பெறுவது கடினம். இதெல்லாம் புது விஷயமல்ல. அனைவரும் அறிந்ததே. தமிழகத்திலுள்ள சூழலை பொறுத்து தான் அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறுவதும் சரி. அந்த சூழலை மாற்ற அரசு என்ன செய்யப் போகிறது, எப்போது செய்யப் போகிறது என்பது தான் தலையாய கேள்வி.

18 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு மது கொடுக்க கூடாது என்று டாஸ்மாக் விற்பனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர். யதார்த்த ரீதியில் அந்த வயதிற்கு கீழேயுள்ளவர்கள் எவ்வளவு பேர் அந்த கடைகளுக்கு மது வாங்கச் செல்கிறார்கள். அப்படி விற்றால் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பதையும் அமைச்சர் அறிவார்.

மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு மாற்று வழி இல்லை என்று சொல்ல முடியாது. எங்கும் இலவசம், எதற்கும் இலவசம், எல்லாருக்கும் இலவசம் என்று கொடுப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. அந்த இலவசங்கள் அப்பட்டமான வாக்குவங்கி அரசியல். அந்த இலவசங்களை அளிக்க அரசிடம் உபரி நிதி கிடையாது. அதற்கெல்லாம் ஒரு முக்கிய உபாயமாக டாஸ்மாக் வருமானம் உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.

இலவசங்கள் மூலம் செலவிடப்படும் தொகையில் மகளிர், சமூகத்தில் நலிந்த பிரிவினர், பின் தங்கியவர்கள் ஆகியோர் கல்வி பயின்று மேலும் முன்னேறுவதற்கு நூற்றுக்கணக்கான கூடுதல் பள்ளிகளை திறக்க முடியும். ஒவ்வொரு கிராமத்திலும் சுத்தமான குடிநீர் அளிக்க முடியும், என்று இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனவே ஒரு புறம் இலவசம் மறு புறம் சாராய வியாபாரம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அரசு நினைத்தால், அல்லது முதல்வர் உறுதியாக முன்னின்று மதுக்கடைகளை மூடியும் அரசை சிறப்பாக நடத்த முடியும் என்று அறிவித்தால், அதைவிட சிறப்பு வேறென்ன இருக்க முடியும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர்… பதற்றமும்… கைதும்…

ஓணம்,மிலாடி நபி பண்டிகை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவை.