தலையங்கம்
சிவா பரமேஸ்வரன்
மருத்துவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள், மருத்துவமனைகள் ஆலயங்களுக்கு ஒப்பானவை என்பது அறியப்பட்ட ஒன்று. இரு இடங்களுக்கு மக்கள் அதீத நம்பிக்கையுடன் செல்கிறார்கள்.
ஆனால், அண்மைக் காலத்தில் அந்த நம்பிக்கை பல இடங்களில் பொய்த்து வருவதை காண முடிகிறது. பல மருத்துவமனைகளில், திறமையான, அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவர்கள் இருந்தாலும், பணம் இருந்தால் மட்டுமே மருத்துவம் என்ற நிலை தான் யதார்த்தம். ஏன் அரசு மருத்துவமனைகள் இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்பு. அதற்கு பின்னால் வருகிறேன்.
பெரிய அளவில் இயங்கும் தனியார் மருத்துவ மனைகள் இலாப நோக்குடன் மட்டுமே இயங்குகின்றன என்ற நிலையில், அவை குறைந்தபட்சம் சட்டத்தை மதித்து, பொதுமக்களின் நலன்களில் அக்கறை காட்டுகிறதா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்த கேள்வி எழுந்ததே நம்பிக்கையின்மையின் காரணமாகத்தான். அது ஏன் என்பதை அந்த மருத்துவமனைகள் சுயபரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். பெரும்பாலான மருத்துவ மனைகளில் உள்ளே நுழைந்தவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி, “பணமா இன்ஷுயரன்ஸா” என்பது தான். அதாவது பணத்தை உறுதி செய்த பிறகு தான் மருத்துவம். காப்புறுதி உள்ளது என்றால், அதற்கான நடைமுறைகளே மாறும்.
இந்த பெரிய மருத்துவமனைகளில் நடைபெறும் அராஜகங்களை ஆய்வு செய்து கட்டுரையாக்கினால் அது முடை நாற்றமெடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். சரி, சிறப்பான சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறி, வாழ்நாள் வருமானத்தை பறிக்கிறார்களே என்று மக்கள் ஆதங்கபட்டு கூறினாலும், வாங்கும் பணத்திற்கு ஏற்ற வகையில் அந்த மருத்துவமனைகள் நடந்துகொள்கிறதா என்பது பெரும் கேள்வி.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
மருத்துவக் கழிவுகளை அவர்கள் மருத்துவமனைக்குள் முறையாக கையாள்வதாக காட்டிக்கொண்டாலும், அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் அவர்கள் முறையாக ஈடுபடுகிறார்களா என்பது கண்காணிக்கப்படுகிறதா? இல்லை என்பதே பதில். இதற்கு சான்று பத்திரிகைகளில் வரும் புகைப்படங்கள், செய்திகள். இரவு நேரங்களில் அதை மூட்டையாக கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கள்ளத்தனமாக கொட்டுகின்றன என்பதை அந்த செய்திகளும் படங்களும் காட்டுகின்றன.
அந்த கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அவை முற்றாக ஏற்று நடக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை. முதலில் அதை முறையற்ற வகையில் அப்புறப்படுத்துவது சட்டவிரோதமானது. இரண்டாவது அது தூய்மை பணியாளர்களுக்கு உடல் ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மருத்துவ கழிவுகளில் பெரிய அளவில் ஊசிகள், ஆபத்தான மருந்துகள், கதிரியக்க கழிவுகள், நோயாளர்கள் பயன்படுத்திய பொருட்கள், அதிலுள்ள தொற்றுகள் என்று பல வகைகள் உள்ளன. இவை இரவோடிரவாக பொது இடங்களில் கொட்டப்படும் போது, அது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும் விளை நிலங்களுக்கு அருகில் கொட்டப்படும் போது, அந்த நிலங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் சீர்கேடாகிறது.
இதெல்லாம் அரசுக்கும், அதிகாரிகளுக்கு தெரியாதா? அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைவாக மருத்துவக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறதா என்பது முறையாகவும், சீரான இடைவெளியிலும் ஆய்வு செய்யப்படுகிறதா? அது குறித்த விவரங்கள் பொதுவெளியில் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், பூனைக்குட்டி வெளியே வரும்.
சரி, அரசு மருத்துவமனைகளில் நிலை அதைவிட மோசம் என்று மக்கள் கூறுவதையும் புறந்தள்ள முடியாது. அரசு மருத்துமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் மருத்துவக் கழிவுகள் எவ்வகையில் அப்புறப்படுத்தப்படுகின்றன. அதற்கும் பொதுவெளியில் பதிலில்லை.
கூவம் ஆறு சீர்கெட்டுப் போக ஒரு முக்கியக் காரணம், சென்னை பொது மருத்துவமனை, அதன் அருகில் முன்னர் இருந்த சிறைச்சாலை, இதர அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் கழிவுகள் கூவம் ஆற்றில் விடப்பட்டதே என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
பொது மருத்துவமனைகளில் சுத்தமும், சுகாதாரமும் பேணப்பட்டு, அங்கும் சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அரசு மக்களிடம் ஏற்படுத்தாத வரை தனியார் மருத்துவமனைகளில் அட்டூழியங்கள் குறையாது. ஆனால் அந்த நம்பிக்கையை அரச மருத்துவமனைகள் ஏற்படுத்தி முன்னுதாரணமாக இருக்குமா? அல்லது தனியார் துறை வளர்வதற்காக திட்டமிட்ட வகையில் அரசு நிறுவனங்கள் சீரழிக்கப்பட்ட நிலை தொடருமா?
எதிர்ப்பார்ப்புகளும் அதிகம், ஏமாற்றங்களும் அதிகம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings