தலையங்கம்
பேராசிரியர் நாகநாதன், சுதந்திரப் போராட்டத் தியாகி கடலூர் மு.அஞ்சலையம்மாள் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
’20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதே பெரும் வியப்பாகப் பார்த்த காலம். பெண்ணுரிமை என்பது வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் இதே நிலை தான் இருந்தது.
வட அமெரிக்காவில் 1920ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 1928ஆம் ஆண்டிலும் தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால், உலகிற்கே பிரெஞ்சுப் புரட்சியின் வழியாக சமத்துவ உரிமைகளை எடுத்துரைத்த பிரான்சு நாட்டில் 1944ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்தியாவில் எடுத்துக்கொண்டால் 1950ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு தான் அனைவருக்கும் சமமான வாக்குரிமை வழங்கப்பட்டது.
அஞ்சலை அம்மாள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு நடுத்தர வருமானக் குடும்பத்தில் பிறந்து விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பதை நினைக்கும் போது நமக்கு பெரும் வியப்பினை அளிக்கிறது.
அண்ணல் காந்தியாரிடம் நேரடியாகத் தொடர்பு வைத்திருந்த குடும்பங்களில் கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பமும் ஒன்றாகும். விடுதலைப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு தனது கணவர் முருகப்பாவையும் இணைத்து விடுதலைக் களத்தில் போராடியவர். இதன் காரணமாக முருகப்பாவும் சிறைக்குச் சென்றார்.
விடுதலைக் களத்தில் ஈடுபடும் போது கர்ப்பிணியாக இருந்து சிறை சென்றார். சிறையிலேயே மகன் பிறந்த காரணத்தினால் தனது மகனுக்கு ஜெயில் வீரன் என்று பெயரிட்டார். தனது மகள் {எனது மாமியார் அம்மாக்கண்ணு} என்று அழைக்கப்பட்ட சிறுமியை அழைத்துக் கொண்டு நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். அம்மாக்கண்ணு சிறுமியாக இருந்த காரணத்தினால் அடையாறில் உள்ள காப்பகத்தில் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை பெற்றதும் அம்மாக்கண்ணுவை அண்ணல் காந்தி தனது வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று சில ஆண்டுகள் இருக்கச் செய்தார். அங்கு தான் அம்மாக்கண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மாற்றினார்.
அஞ்சலை அம்மாள் சிறையில் இல்லாத நேரத்தில் காங்கிரசு கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கு பெறுகிற தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தன் வீட்டிலேயே உணவு செய்து பரிமாறியவர்.1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குச் சென்ற பெண்களின் வரிசைப் பட்டியலில் கடலூர் அஞ்சலை அம்மாள் முதல் இடத்தில் உள்ளார்.
விடுதலை வேள்வியில் பங்கு பெற்று, பின்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினராக இணைந்து 9 ஆண்டுகள் 6 மாதம் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள சிறைகளில் இருந்தவரும் மார்க்சிய அறிஞரும் பன்மொழிப் புலவராருமான க.ரா. ஜமதக்னியை சிறையில் சந்தித்துத் தனது மகள் அம்மாகண்ணு (எ) லீலாவதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அஞ்சலை அம்மாள் கேட்டுக்கொண்டார். க.ரா. ஜமதக்னி சிறையில் இருந்து விடுதலை பெற்றவுடன் பதிவுத் திருமணத்தை எளிய முறையில் செய்து கொண்டார்.
1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1952இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கடலூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார், கடலூர் அஞ்சலை அம்மாள். இத்தகைய அர்ப் பணிப்புகளை நாட்டின் விடுதலைக்காகச் செய்த கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களைத் ‘தென்னாட்டு ஜான்சிராணி’ என்று அழைத்து அண்ணல் காந்தி புகழ் மாலை சூட்டினார்.
அவரின் அரிய பெரிய தியாகங்களைச் சுட்டிக்காட்டி, அஞ்சலை அம்மாள் அவர்களுக்குக் கடலூரில் சிலை வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் அவருடைய கொள்ளுப் பேரன், ஆயிரம்விளக்குச் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் எழிலன் நாகநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை மிகப் பெருந்தகைமை யோடு ஏற்றுக்கொண்டு திராவிட மாடல் அரசின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அஞ்சலை அம்மாள் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்பித்தார்’. கடலூர் அஞ்சலை அம்மாள் வரலாற்றை தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் சேர்த்தால், சரியான வரலாற்று தியாகிகள் பற்றி இளம் தலைமுறையிடம் சேர்த்த பெருமை கிடைக்கும். செய்வார்களா?
தெ.சீ.சு.மணி
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings