தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கே.செட்டி அள்ளி, அகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாது (60) – லட்சுமி (55) தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் இன்ஜினியரிங் படித்து வருகிறார். வர்களின் இளைய மகன் முனிவேல் (17) 11ம் வகுப்பு முடித்துவிட்டு, கோடை விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ஒருவரின் 13 ஆம் நாள் இறப்பு காரியத்திற்கு, சுமார் 60 பேருடன் டூரிஸ்ட் பேருந்தில் நேற்று ஒகேனக்கல் வந்துள்ளனர். நேற்று மதியம் ஒகேனக்கல் வந்த அந்த குழுவினர், உரிய சடங்குகளை செய்த பின்பு, காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது முனிவேல் மற்றும் அவரது நண்பர்கள் ஆலம்பாடி பரிசல் துறை அருகே இருந்து காவிரி ஆற்றை கடந்து வர முற்படும்போது நீரில் மூழ்கி மாயமானார்.
இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான மாணவனை தீவிரமாக தேடினர். 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு இரவு எட்டு மணி அளவில், முனிவேல் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆலம்பாடி பரிசல் துறை பகுதியில், ஐந்து மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதி, இங்கே குளிக்க அனுமதி இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் சென்று குளிப்பதால், அடிக்கடி உயிர் பலியாவது தொடர்கதையாக உள்ளது.
கோடை விடுமுறையில் ஊரில் இருந்த மாணவன், நீத்தார் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஒகேனக்கல் வந்த நிலையில், நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings