ஒரு வழியாக இந்தியா உச்சநீதிமன்றம் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியுள்ளது. அவர் திகார் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், முழு உத்தரவு வரும் வரை கூண்டுக்கிளியாகவே இருப்பார் என்பது வேறு விஷயம்.
அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் கூறியுள்ள கருத்துக்கள் முக்கியமானவையாக உள்ளன. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்வல் புய்யன் தனித்தனியான தீர்ப்புகளை அளித்திருந்தாலும், அவருக்கு பிணை வழங்குவதில் ஒரே கருத்தை வெளியிட்டிருந்தனர். வேறு சில சட்ட நுணுக்கங்களில் அவர்கள் மாறுபட்டாலும், அவரது கைது தொடர்பிலான விஷயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
மிகவும் முக்கியமாக மத்திய அமைப்புகள் எப்படி நடந்துகொள்கின்றன என்பதில் அவர்கள் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்கள். அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் அவருக்கு பிணை உச்சநீதிமன்ற பிணை வழங்கிய நீதிமன்றம், உடனடியாக ஏன் சி பி ஐ வழக்கில் கைது செய்ய வேண்டும் என்ற கேள்வியை அவர்கள் இருவரும் எழுப்பினர்.
அதாவது அரசின் ஒரு துறை தாக்கல் செய்த வழக்கில் பிணை வழங்கிய நிலையில், உடனடியாக அந்த பிணையை செயலற்று போகும் நோக்கில் மற்றொரு வழக்கில் கைது செய்வது மிக தவறானது என்று அவர்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது நேரடியாக மத்திய அரசு மற்றும் அதன் கண்காணிப்பில் இயங்கும் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடியாகத்தான் பார்க்கப்பட் வேண்டும். அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு இரண்டும் மத்திய அரசின் ஏவல்கள்படியே செயல்படுகின்றன என்பதை நீதிமன்றம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. இது புதிதல்ல. மத்தியில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளுமே அப்படியாகத்தான் அந்த அமைப்புகளை பயன்படுத்தியுள்ளன என்பதும் உண்மை.
இந்த தீர்ப்பு மத்திய அரசின் மீதான கண்டனமாக மட்டுமே பார்க்கபப்டக் கூடாது. மாநில அரசுகளும் இப்படியாக நடந்துகொள்கின்றன. ஒரு நபர் மீது ஒரு வழக்கைப் போடுவது, அந்த வழக்கில் அவர் பிணை பெற்று சிறையிலிருந்து வெளியே வரும் நிலையில், மேலும் ஒரு வழக்கை போடுவது என்பதும் நடைபெறுகிறது என்பதை நாம் மறக்க முடியாது.
அண்மையில் இப்படியான தொடர் கைது குறித்த ஒரு வழக்கில் தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தில் வாங்கிக்கட்டிக்கொண்டது என்பதையும் மறக்க இயலாது.
பொதுவாக மாநில அரசால் ஒரு விசாரணையை முன்னெடுக்க முடியாது அல்லது அந்த விசாரணை பாரபட்சமாக இருக்கும் என்று கருதப்பட்டால் மட்டுமே மத்திய புலனாய்வுத்துறை தலையிடும், அல்லது மாநில அரசின் வேண்டுகோளின்படியே ஒரு வழக்கை சி பி ஐ முன்னெடுக்கும். அந்த நடைமுறை அல்லது விதியெல்லாம் பல வழக்குகளில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
மத்திய புலனாய்வு அமைப்பு நாட்டின் முன்னணி விசாரணை அமைப்பு என்றும், அது பாரபட்சமற்ற வகையில் நடந்துகொள்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி புய்யன் கூறுவதில் ஏராளமான அர்த்தங்கள் உள்ளன. ஒரு நபரை கைது செய்ய வேண்டிய அளவிற்கு முகாந்திரம் உள்ள ஒரு வழக்கு இருக்கிறது என்றால், ஏன் 22 மாதங்கள் மத்திய புலனாய்வுதுறை காத்திருந்தது என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
கைது என்பது அசாதாரணமாகத்தான் இருக்க வேண்டும், பிணை என்பதே சாதாரணமாக இருக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இனியாவது மத்திய புலனாய்வுத்துறையும் அமலாக்கத்துறையும் வழக்கின் தன்மையை கருதியே நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மத்திய அரசின் ஏவலாளிகளாக செயல்பட முடியாது என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings