சென்னை,
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வைக் கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்குத் தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளன.
GIPHY App Key not set. Please check settings